Tuesday, March 3, 2020

எங்கள் தூக்கம் அசாத்தியமானது

சுற்றி என்ன நடந்தாலும் கண்களை, காதுகளை திறந்து கொண்டு

தூங்கிடும்  எங்கள் தூக்கம் அசாத்தியமானது..

ஆலயங்களில், சாலையோரங்களில், வீடுகளில் ஆணாதிக்க வெறியர்கள் கூறு போடுகையில் எங்கள் ஆசிபாக்களும், நிர்பயாக்களும் கதறி அலறுவது கேட்டாலும்

கேளாக்காதினராய் தூங்கிடும்  எங்கள் தூக்கம் அசாத்தியமானது..

சனாதனத்தின் "நீட்"டிய கரங்கள் எங்கள் அனிதாக்களின் குரல்வளையை நெரித்தாலும்,

எங்கள் பிஞ்சுகளின் கல்விக்கனவை பாசிசத்தின் கொடுங்கரங்கள் நசுக்கினாலும்

கண்டுகொள்ளாத எங்களின் தூக்கம் அசாத்தியமானது..

எங்கள் காடுகளை, மலைகளை வெட்டியழித்தாலும்,

விவசாய நிலமழித்து மீத்தேன் அழிவு திட்டங்களை எங்கள் மீது திணித்தாலும்

ஆளும் வர்க்கத்தை கேள்விகேட்காத எங்கள் தூக்கம் அசாத்தியமானது.

ஆளும் பாசிசத்தால் வெட்டிக்கிழிக்கப்பட்ட காஸ்மீரத்து ரோஜாக்களின் குருதி வெண்பனியில் பட்டு எங்கள் மீது தெறித்தாலும்

போராடும் எங்கள் மனிதர்களை கார்ப்பரேட்களின் கால்நக்கும் ஆளும் வர்க்கம் சுட்டு கொன்றாலும்

உணர்ச்சியற்ற தோலுடன் திரியும் எங்கள் தூக்கம் அசாத்தியமானது..

உரிமைக்காய் போராடும் எங்கள் பெண்களை சீருடை குண்டர்களின் அகங்கார பூட்ஸ்கள் எட்டி மிதித்தாலும்,

எங்கள் வாழும் உரிமை பறித்து, உரிமைக்குரல் எழுப்பியவரின் குரல்வளையை நெரித்து அதிகாரவர்க்கம்  கொக்கரிக்கும்போதும்

எனக்கென்ன என ஒதுங்கி செல்லும் எங்கள் தூக்கம் அசாத்தியமானது..

அநீதி கண்டு கிளர்ந்தெழுந்தால் நீயும் என் தோழனே என்ற சேவின் படத்தை வாகனங்களில், டி-சர்ட்களில் அணிந்து கொண்டு அநீதி கண்டால் கண்களை மூடிக்கொள்ளும்

எங்கள் தூக்கம் அசாத்தியமானது..

கோட்ஸேக்களின் வாரிசுகள் எம் வாழும் வழி அழித்து எங்கள் கோவணத்தை உருவினாலும்

மானத்தை மறைக்க கூட கைகள் தூக்காத எங்கள் தூக்கம் அசாத்தியமானது...

எங்கள் தூக்கம் அசாத்தியமானது...